Tuesday, August 30 13 comments

குட்டிக்கு ஒரு வாழ்த்து..





அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் இரண்டு வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
(சித்)அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!






Friday, August 26 2 comments

இந்தியன் தாத்தா அன்னா ஹசாரே





அன்னா  11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற்பட்டு இருப்பது சந்தோசமான விஷயம். லஞ்சம் கொடுத்து கொடுத்து ஏங்கி போய் இருந்த மக்களுக்கு யாரவது இந்தியன் தாத்தா போல் வந்து தட்டி கேக்க மாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டுயிருந்த நமக்கு கிடைதவர்தான் அன்னா  ஹசாரே.


யார் இந்த அன்னா, இவர் என்ன தவறு செய்தார் இவர் நல்லவரா, கெட்டவரா, என்பதையெல்லாம் விட்டு விட்டு அரசாங்கத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு, ஒருவர் வந்திருக்கிறார் என நாம் நினைக்க வேண்டும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல திணறி கொண்டிருப்பதே அரசின் நிலைமையை எடுத்து காட்டிவிடுகிறது. 

இப்போது எங்கு சென்றாலும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டுமென்ற போராட்டம் காட்டுத் தீயாய் பரவிகொண்டிருகிறது இந்தஅளவிற்கு போராட்டம் நடைபெற என்ன காரணம். எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல், என பார்த்து பார்த்து கொடுத்து கொடுத்து, மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதையே இந்த எழுச்சி காட்டுகிறது. 

ஆனால் அரசோ இந்த விஷயத்தில் இருந்து எப்படியாவது தப்பி ஓட பார்த்தது, அன்னா மீது பழி போட பார்த்தது, பதுங்கப் பார்த்தது,  போராட்டங்களை ஒடுக்க பார்த்தது, இந்த முறையும் மக்களை ஏமாற்றி விடலாமென்று நினைத்து. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்பொழுது அரசு நிற்கிறது, மக்கள் இப்பொழுது தனக்கு கிடைத்த ஆயுதத்தை இறுகப் பிடித்து கொண்டனர், அதுவே அரசுக்கு விழுந்த மிகப் பெரிய அடி.

வெளியில் எங்கு சென்றாலும் இளைஞர்களும், முதியவர்களுக்கும், உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள் என இந்த மசோத பற்றி பரப்புரை செய்து கொண்டுயிருகின்றனர், அடித்தட்டு மக்களும் இப்பொழுது இச் சட்டம் பற்றி பேச தொடங்கி விட்டனர், இனி ஊழல் செய்ய முடியாது, என்னென்றால் ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களிடம் வர போகிறது.. இனி ஊழல் செய்து வழக்கை வாய்தா வாங்கி ஒட்டி விடலாமென்ற நிலை இருக்காது. ஊழல் செய்த பணத்தில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும், ஊழல் புகார் நிருபிக்கப்பட்டால் அந்த நபரை இரண்டு ஆண்டுக்குள் சிறைக்கு அனுப்ப முடியும், 


என்ன சொல்கிறது ஜன் லோக்பால்

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால். 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா. 

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது. 

எந்த ஒரு அரசியல் சாயமின்றி போராடுவதே இந்த எழுச்சிக்கு காரணம், மக்கள் அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருந்தான் இப்பொழுது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது, நம் இளஞ்ர்களால். அப்துல்கலாம் சொன்னதை போல் இளஞ்ர்கள் கையில் இந்தியா இருப்பது நம் கண் முன் தெரிகிறது.. இந்த போராட்டத்தை திரளாக கலந்து கொண்டு போராடும் இளஞர்களை பாராட்டுவோம். இன்னமும் இந்த அரசு தப்பித்து ஓடவே பார்க்கிறது... நம் விடாமல் போராடுவோம். 

ஊழல்லற்ற நாடாக மாற்றுமா இந்த ஜன் லோக்பால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 


தகவல் உதவி : webdunia


Saturday, August 13 5 comments

சகோதர சகோதரிகளே..






சகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ரக்ஷாபந்தன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி என்ற கயிறைக் கட்டுவது இந்நாளில் சிறப்பு. ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் உறவு என்று பொருள். 

உறவினர்களாக இல்லாத இருவர் ஒரு கயிறின் மூலம் சகோதர சகோதரிகளாக மாறுவது இந்த கயிற்றின் சிறப்பு. இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடிவந்த இந்த விழா இப்போது தென்மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் விழா புராண காலத்தில் இருந்தே தொடர்கிறது. 

ரக்ஷாபந்தன் கயிற்றை தன் சகோதரன் கையில் சகோதரி கட்டுவதன் மூலம் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த சகோதரனுக்கு கிடைத்து விடுகிறது. ராக்கி கயிறு கட்டப்பட்ட பிறகு எந்த காரணத்தைக் கொண்டும் அந்த புதிய சகோதரியை ஆயுள் முழுக்க காப்பாற்றுவது என்று கட்டுப்பாட்டிற்குள் சகோதரர் வந்து விடுகிறார். ஆடி மாதத்தை சிரவன மாதம் என்றழைக்கும் வட மாநிலத்தவர்கள், அந்த மாதத்தின் பௌர்ணமி நாளில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். ராக்கி கயிறு கட்டும் சந்தோஷ நிகழ்வின் பொழுது இருவரும் இனிப்பை பரிமாறி கொள்வார்கள்.

மகாபாரத காலம் தொடங்கி இப்போது வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் கையின் மணிக்கட்டில் ரக்ஷாபந்தன் கயிறுகட்டும் பழக்கம் மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளதென்றும் கூறப்படுகிறது. போரின் போது கையின் மணிக்கட்டில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டுள்ளதைப் பார்த்ததும் திரெளபதி, தன் பட்டுச்சேலையின் முந்தானையைக் கிழித்து அந்த துண்டுதுணியை கிருஷ்ணர் மணிக்கட்டில் விடுகிறாள். இந்த அன்பான செயலை பார்த்து வியந்த கிருஷ்ணர், திரளபதியை தன் சகோதரியாக பாவிக்கிறார். அவளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குகிறார். அதனால் தான், துரியோதனன் சபையில் துயில் உறியப்படும்போது தன்னைக் காப்பாற்றுமாறு திரெளபதி வேண்டவே கிருஷ்ண பகவான் சேலையை வழங்கி மானத்தை காப்பாற்றுகிறார். 

சாதாரண கயிறு இவ்வளவு பெரிய பந்தத்தை, உறவை ஏற்படுத்துவதால், புராண கால சம்பவங்களைப் பின்பற்றும் மக்களும் இந்த பழக்கத்தை இப்போதும் பின்பற்றுகிறார்கள் இதற்கு பல வரலாற்று சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. இந்த விழாவிற்கு பாலிவா என்ற பெயரும் உண்டு. வாலி மன்னனை போற்றும் விதமாக பாலிவா என்று அழைக்கப்படுகிறது வைகுண்டத்தைக் காப்பற்றச் சென்று விட்ட கணவர் விஷ்ணு பகவானைக் காணாத லட்சுமி தேவி அவருக்கு எந்த தீங்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாமன்னர் வாலியின் கையில் ராக்கி கயிற்றை கட்டுகிறாள். அதற்கு பிறகு, சகோதரியின் கணவர் விஷ்ணுவை காப்பாற்றும் பொறுப்பு மன்னன வாலிக்கு வந்து விடுகிறது. அதை நினைவு கூரும் விதமாகவே பாலிவா என்று இந்த விழா அழைக்கப்படுகிறது.

எம ராஜனின் சகோதரியான யமுனா நதி, தன் சகோதரன் கையில் ராக்கி கயிற்றைக் கட்டுவதன் மூலம் யமனுக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறாள் அதற்கு பிராயசித் தமாக, கையில் ராக்கி கட்டி இருப்பவர்களை எமன் எதுவும் செய்வதில்லை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத் ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார். அவ்வளவு பெரிய விமோசனத்தை இந்தச் சிறு கயிறு அலேக்சாண்டருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. சித்தூர் ராணி கர்னவதி, முகலாய மன்னர் ஹிமயூனுக்கு கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள் அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபர்ர்ரியதும், போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தாக வரலாறுகள் கூறுகிறது. 


இப்படி ஏரளாமான புராண, வரலாற்று காலசம்வங்களை உதாரணமக கொண்ட ரக்ஷாபந்தன் நாளில், தென்மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களும் ராக்கி கயிறைக் கட்டிக் கொள்கின்றனர். ராக்கி கயிறு வெறும் கயிறு தான் ஆனால் ஒரு புதிய சொந்ததையே தருகிறது..என்பது தான் மிக சிறப்பு, ராக்கி கயிறு ஆண் பெண் இருவருக்குமே நல்ல பாதுகாப்பை தருகிறது..வருடா வருடம் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடி உறவை மேம்படுத்தி வருகிறோம்... 

பதிவுலகம் கொடுத்த உறவு கௌசல்யா, ஆனந்தி, மகேஸ்வரி, ரேவதி அக்காக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். புடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..!!


அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்


Wednesday, August 10 7 comments

பட்டைய கிளப்பும் மங்காத்தா பாடல்கள்...


மங்காத்தா அஜித்தின் 50 வது படம். அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள், படம் மே 1 அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றார்கள் ஆனால், வெளிவரவில்லை, ரசிகர்களுக்காக விளையாடு மங்காத்தா..என்ற ஒரு பாடலைவெளியிட்டார்கள்.. அந்த பாடல் ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.. இன்று மங்காத்தா படத்தின் அணைத்து பாடல்களையும்..வெளியிட்டுயிருக்கிறார்கள்..


நேற்றே இணையத்தில் வெளியிட்டதால் நேற்று இரவே பாடல்களை கேட்டு விட்டேன்.. இப்போது ஒவ்வொரு பாடல்களையும் அறிமுகம் செய்கிறேன்..



முதல் பாடல் ஏற்கனவே வெளியிட்ட விளையாடு மங்காத்தா பாடல் தான்..
யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசித்ரா , பிரேம் ஜி அமரன், அனிதா பாடியுள்ளார்கள்..

பாடல் வரி கங்கை அமரன் 

விளையாடு மங்காத்தா !
விட மாட்டா எங்காத்தா !!
வெளி வேஷம் போடாட்டா!
இந்த வெற்றி கிட்ட வாராதா !!

அஜித்தின் வாழ்கையை மனதில் வைத்து எழுதிய பாடல் போல் வரிகள் இருக்கிறது ஏற்கனவே இந்த பாடல்கள் வெற்றிபெற்று விட்டது.. இந்த வருடத்தின் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக இது இருக்கும்... இந்த பாடலையே கிளப் மிக்ஸ் செய்து இருக்கிறார்கள்..

அடுத்த பாடல் மேலோடி பாடல் sp சரண் பவதாரணி குரலில்.. 

கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..!! 
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..!! 
என் தேடல் நீ உன் தேவை நான்..!! 
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..!! 
என் பாதி நீ உன் பாதி நான்..!! 
என் ஜீவன் நீ உன் தேகம் நான்..!! 
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்..!! 
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..!! 

நிரஞ்சன்  பாரதி வரிகள் கவிதையாக... மற்ற பாடல்களை விட இந்த பாடலே எனக்கு மிகவும் பிடித்தது.. மனதிற்குள் மெல்ல மெல்ல நுழைந்து மனதை ஆக்கிரமிக்கிறது...  மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது..!!!



வாடா பின்லேடா என்ற பாடலை கிரீஸ் சுசித்ரா.. பாடியுள்ளார்கள்...வாலி வரிகளில் 

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோ டா 

டிவின் டவர், ஜப்பானின் ஹைக்கூ , ரஷ்யா, என வாலியால் மட்டுமே பாடல் எழுத முடியும்.. இந்த பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது...  இந்த பாடல் சுமார்ரகம் தான்.


 மச்சி  ஓபன்  தி  பாட்டில்.. என்ற ஃபோக் சாங் . மனோ, பிரேம்ஜி அமரன், திப்பு ,ஹரிசரண், நவீன் பாடியுள்ளார்கள்.. வாலி வரிகளில்....

இது அம்பானி பரம்பரை 
ஐஞ்சாறு தலை முறை 
ஆனந்தவளர்பிறை தான் 
நாம கொட்டுன்னு ஒருமுறை 
சொன்னாக்க பல முறை 
கொட்டாதோ பண மழை தான் 
நாம முன்னேற படிக்கட்டு 
நாம் வாழ்வில் கிரிக்கெட்டு 

இந்த பாடல் நடுவில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்ற பாடல் வரி வருகிறது. இந்த பாடலில் அஜித் என்ட்ரியாக இருக்கும் என நினைக்குறேன்.. ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். 



 மதுஸ்ரீ, யுவன்ஷங்கர்ராஜா சோகமான மேலோடி பாடல்... வாலி வரிகளில்...

ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய் யோ..
என் பாவமாய் வந்து வாய்தாய் 
உன் போலவே நல்ல நடிகன் 
ஊரெங்கிலும்யில்லை ஒருவன் 

கேட்க கேட்க பிடிக்கும் பாடல் இது இனிமையாக இருக்கிறது.. அனைவரையும் கவரும் பாடலாக இப்பாடல் இருக்கும் யுவன் சங்கர் குரல் நன்றாக இருக்கிறது...



இது எங்க பல்லேலக்கா.. புது நாக்குமுக்கா.. கார்த்திக், விஜய் ஜேசுதாஸ், அனுஷா தயாநிதிகுரல்களில், கங்கை அமரன் வரிகளில்... 

இது எங்க பல்லேலக்கா 
நீ கேளு கொக்கமக்கா..
நியூடைப்பு நாக்கு முக்கா 

இந்த பாடல் சுமார் ரகம் தான் பாடல் கேட்பதற்கு போர் அடிக்கவில்லை... இப்பாடலில் தயாநிதி அழகிரி, மனைவி அனுஷாவும் பாடியுள்ளார். 


பில்லா படத்தில் வருவது போல் இதிலும் தீம் மியூசிக் ஒன்று நன்றாகயிருக்கிறது, இனி அணைத்து டிவிகளில் இந்த தீம் மியூசிக்கே ஆக்கிரமிப்பு செய்யும்.... 



படம் வருவதற்கு முன்பு பாடலை கேட்டு விட வேண்டும் அதில் ஒரு ஆர்வம், எப்படியிருந்தாலும் படத்தில் பாடல் வர தானே போகிறதென்று இருக்க முடியாது. ஒரு அஜித் ரசிகனுக்கு, பாடல் அணைத்து கலவையானதாக அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பது சிறப்பு, மொத்தத்தில் இந்த வருடமுழுவதும் மங்காத்தா பாடல்கள் தான் கேட்க போகிறது.... அடுத்து விநயாகர்சதுர்த்தி வேறு வரபோகிறது... தெருவெங்கும் மங்காத்தா பாடல் பட்டைய கிளப்ப போகிறது.... 


பாடல்களை தரவிறக்கம் செய்ய





பட்டைய கிளப்பும் ட்ரைலர்...









முந்தையப் பதிவு : அடைமழைக் காதல்.....



Tuesday, August 9 22 comments

அடைமழை காதல்.. நித்தியா (சிறுகதை)

 
பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நாங்கள் நண்பர்களாகிய கூர்மதியன் ,ரேவா, நான் ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!






"மணி எட்டு ஆச்சு இந்த பையன் இன்னும் எழுந்திருக்காம இன்னும் தூங்கிட்டு இருக்கான், டேய் ஆதி .. எழுந்திரிடா" ஆதித்தியா அம்மாவின்...குரல் சமையல் அறையில் இருந்து படுக்கை அறை வரை ஒலித்தது ..அம்மாவின் குரல் கேட்டும் இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை, டேய் எழுந்திரி வேலைக்கு போக டைம் ஆச்சு.. என தட்டி எழுப்பியவுடன் தான் அவனுக்கு விடிந்தது, இது தினமும் அவனின் வாடிக்கை தான். .

குளிச்சு முழிச்சி  பரபரவென வந்தவன், நேரமாச்சி இன்னுமா சாப்பாடு கட்டுறே என அம்மாவை கடிந்து கொண்டான். "எழுந்தது லேட்டு...... என்ன கேள்வி கேக்குறீயா..??  உனக்கெல்லாம் ஒருத்தி வருவா அப்போ கஞ்சிதண்ணி கூட இல்லாம போவே அப்போ தெரியும் டா என்ன பத்தி" "என்னம்மா காலையியே உன் புலம்பல ஆரம்பிச்சிட்டியா..?? சரிம்மா நான் போயிட்டு வருகிறேன்" என்று பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றான்,  நேரம் சரியாக 8.45 அவன் செல்லும் பஸ் வந்து நின்றது. ஒரு மணி நேர பயணம், எப்போதும் பயணத்தின் போது புத்தகம் படிப்பதும், கவிதைகள் எழுதுவதும் அவன் வேலை, வழியில் நடப்பதையெல்லாம் பார்த்து கவி எழுதுவதே அவன் பொழுது போக்கு. 




வழக்கம் போல ஜன்னல் ஓரங்களில் பார்த்து கொண்டு வந்த அவன் திடீரென்று  இறங்க முற்பட்டான் பூக்களை கோர்க்கும் கைகளை பார்த்து, அவன் வழக்கம்போல் இறங்கும் ஒரு ஸ்டாப் முன்பாகவே, பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே இறங்கி கிழே விழுந்தான். வண்டியில் சிக்கியிருக்கவேண்டியது எதோ தப்பித்து கொண்டான், அச்சமயம் கூட அவனை கவிதைகளே ஆக்கிரமித்தது..

தேவதையை பார்க்கையில் மரணத்தை 
தழுவி இருப்பேன்..!!
பாவம் எமன் இவளை பார்த்திருப்பான் 
போல வந்தவேலையை விட்டு 
வேறுவேலையில் இருக்கிறான்..!!

  

கீழே விழுந்து சட்டேன எழுந்தான், அவள் பூ கடை நோக்கி நடந்து ஓரமாக நின்றான், அடி ரொம்ப பட்டுடுச்சா கொஞ்சம் தண்ணி குடிக்குறீங்களா..??மெல்லிய குரல் கேட்க சட்டென திரும்பி பார்த்தான். அவள் முகம் பார்த்து ஒன்றும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான், ஏங்க உங்களை தான், அவனுக்கு அவள் விசாரித்தது பிடித்து இருந்தது, அவள் கரிசனக்காரி என புரிந்து கொண்டான். 




அதெல்லாம் ஒன்னுமில்லைங்க எனக்கு வேலைக்கு டைம் ஆச்சுங்க நான் போயிட்டு வரேன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பிம்பினான். வேலையில் அவன் கவனம் இல்லாமல் அவள் நினைவாகவே இருந்தான், ஒரு ஐந்து நிமிடம் பார்த்ததற்கே வா இப்படி..? என தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டான், மீண்டும் அவளை பார்க்கவேண்டுமென எண்ணினான், இப்போதே போய் பார்க்கலாமா அல்லது வேலை முடித்து போகலாமா என யோசித்தான், வேலை முடித்தே போகலாம் என முடிவெடுத்து அரைமனதுடன் வேலையை தொடர்ந்தான். பர பரவென வேலையை முடித்து அவளை பார்ப்பதற்காக சென்றான்..

அவள் வருவதற்கு முன்பே காத்திருந்தான், 5 நிமிடத்திற்கு பின் வந்தாள், பூக்களின் நந்தவனமே வந்து கொண்டு இருப்பதாக, அவன் மனம் சொல்லியது, தூரமாக தெரிந்த அவள் உருவம், பக்கம் வந்து கொண்டே இருந்தது, அவள் பக்கம் வரவர இவன் பார்வை விரிவானது. அவள் இவனை பார்க்க வில்லை அவளின் வேலையில் மும்முரமாக இருந்தாள், அவளின் அழகை ரசித்துக்கொண்டு, மனதிலே வர்ணித்து கொண்டுயிருந்தான், 

அவளின் நெற்றியில் குங்குமம், திருநீர், மஞ்சள் என ஒன்றன் கீழ் ஒன்றாக அவளின் நெற்றியை அலங்கரித்து இருந்தது, படிந்து வாரிய அவள் கூந்தல், அதில் ஒற்றை சாமந்தி பூ, பூவிற்கே பூவைக்கும் அதிசயம் இங்கு தான் நடந்து இருக்கிறது என அவன் மனதிற்குள் வரித்து கொண்டே சென்றான், 

பெண்ணே நீ சூட்டும் 
பூக்கள் தவிர 
மற்ற அனைத்தும் வாடி 
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!

என கவிதையை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்ப நினைத்தான், கிளம்பும் முன் அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என நினைத்தான், அவளின் திருத்தப்படாத புருவங்களை பார்த்து மடிந்து வீடு நோக்கி சென்றான். 


மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றான், அவளின் பேருந்து நிலையம் வந்தது... பேருந்தும் நின்றது... அவளை இவன் பார்ப்பதற்கு முன், அவள் இவனை பார்த்து கொண்டு இருந்தாள், இவன் பார்வை பட்டவுடன் அவள் இதழ் புன்னகையால் மலர்ந்தது, ஆதித்தியாவிற்கு சொல்ல முடியாத ஆனந்தம் அவள் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறாளே, அவள் கண்கள் ஏதோ கேள்விகளை கேட்க இவனுக்கு அது புரிவதற்குள் பேருந்து அங்கிருந்து கிளம்பியது, இறங்கிவிடலாம் என எண்ணினான் வேண்டாம் மீண்டும் அவள் முன் விழுந்து விட போகிறோம் என அத்திட்டத்தை கை விட்டான்.      


இன்றைய தினம் அவனுக்கு வேகமா நகர்ந்து விட்டது அவளின் புன்னகையால். மீண்டும் மறு நாள் அதே போல் பேருந்து நிலையத்தில் அவள் காத்திருக்க தொடங்கினாள், பேருந்தை பார்த்தவுடன் சட்டென ஒரு சாமந்தி பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டாள், அவளின் முகம் இன்று மேலும் பிரகாசமாய் இருந்ததை கவனித்து விட்டான், பேருந்தில் இருந்தே சைகையில் ஏதோ கேள்வியை ஆதித்தியா கேட்க... அவள் என்ன வென்று கேட்டாள், அவளுக்கு இவன் சைகை ஒன்றும் புரியவில்லை, இருவரின் மனதோடு பேருந்தும் நகர்ந்தது.

மறுநாள் ஆதித்தியா அவளிடம் பேசவேண்டும் என முடிவெடுத்தான், பேருந்து நிற்பதற்குள் இறங்குவதற்கு தயாராகிவிட்டான், அவளின் கண்கள் பேருந்து ஜன்னலை ஆக்கிரமித்து இருந்தது, இவள் முன் வந்து நிற்கவும் வெட்கப்பட்டு கீழே குனிந்து கொண்டாள். இவன் பேசுவதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டுயிருக்க, சட்டென அவளிடமிருந்து கேள்வி வந்து விழுந்தது..!!!

நேத்து நீங்க என்னமோ சைகை காட்டி கேட்டீங்க என்ன கேட்டீங்க...??? 

சில நிமிடம் மௌனமாய் நின்றான்... 

நீங்க அன்னைக்கு என்ன பார்த்து ஏன் சிரிச்சீங்க..?? அத பத்தி கேட்டேன்.. சரி சொல்லுங்க ஏன் சிரிச்சீங்க..?? 

நான் எதுக்கோ சிரிச்சேன் ஏன் உங்க கிட்ட சொல்லனுமா என்ன..அதெல்லாம் சொல்ல முடியாது என மீண்டும் சிரிக்க.. 

இப்போ சொல்ல போறீங்களா இல்லையா உங்க பேர் என்ன..?? என சிறு கோபத்துடன் கேட்க..

என் பேரு நித்தியா... நீங்க நினைக்குறது எதுவும் நடக்காது...!!!

என் பேரு ஆதித்தியா, நான் என்ன நினைச்சேன் உனக்கு எப்படித் தெரியுமென ஆதித்தியாஅடுத்த கேள்வியை கேட்க..


 போங்க போங்க அப்பறம் வாங்க பதற்றத்துடன் சொல்ல அவள் பதற்றத்தை கண்டு ஆதி சற்று நகர்ந்து சென்றான்... 

அவளிடம் யாரோ ஒருவன் வந்து வாக்குவாதம் செய்து பணம் கேட்டு கொண்டுயிருக்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவள் கண்கலங்குவதை பார்த்து வந்தவனிடம் என்னவென்று கேட்டுவிடலாம் என்ன நினைத்தான்,  சண்டை போட்டால் ஏதாவது நினைத்து விடுவாளோ என அமைதியாக இருந்து விட்டான்.

வந்தவன் அவளிடம் இருந்த பணத்தை எல்லாம் வாங்கி பிடுங்கி சென்று விட்டான்...

சிறிது நேரம் மௌனமாகவே கழிந்தது...

அவளின் கண்ணீர் தொடர்ந்து கொண்டுயிருந்தது... 

யார் அவர் ஏன் உன் பணத்தை பிடுங்கி சென்றார்..???

அவர் என்னுடைய அண்ணன்.... இது எப்போதும் நடப்பது தான் குடிப்பதற்கு என்னிடம் பணம் வாங்கி செல்கிறார், அவருக்கு தெரியாமல் பணத்தை மிச்சப்படுத்தி தான் நானே பூ விற்று வருகிறேன், இன்னும் ஆறு மாதம் தான் இங்கு இருப்பேன் மீண்டும் வேலைக்கு ஊருக்கு எங்க அண்ணன் என்னை அனுப்பி விடுவார் என்றாள். 

என்ன இன்னும் ஆறு மாதம் தான் இருப்பியா..?? ஏன் இங்க செய்ற வேலை என்ன ஆச்சு..??  

நித்தியா தொடர்ந்தாள்..

நான் ஏற்கனவே பத்து வருடமாக ஊரில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன், முன்பே எங்க அண்ணன் இரண்டு லட்சம் வாங்கி என்னை வேலைக்கு அனுப்பி விட்டார், இப்போது மீண்டும் அங்கேயே அனுப்பி விடுவார், அதனால் தான் சொன்னேன், நீங்க நினைப்பது நடக்காதென்று, உங்களை பார்க்கும் பொழுது நெடுநாள் பழகியது போல் ஒரு உணர்வு இருந்தது அதான் உங்களை பார்த்தவுடன் சிரித்தேன். என்றாள் எனக்கும் எல்லாரையும் போல் இருக்க வேண்டுமென்று ஆசை தான் ஆனால், என்னால் முடியாது என் வறுமை தான் காரணம், இங்கு இத்தனை ரோஜா இருந்தும் என்னால் எடுத்து வைத்து கொள்ளமுடியாது.. இது தான் என் நிலைமை. 


அவளின் நிலைமைகளை சொல்ல சொல்ல அவன் மனதில் உறுதியானது அவனின் காதல், இவளையே மணக்க வேண்டுமென எண்ணி கொண்டான், இன்று முதல் உன் நிலைமை மாறப் போகிறது கவலை படாதே உனக்கு நான் இருக்கிறேன். எனக்கு வேலைக்கு நேரமாகிறது நான் நாளைக்கு உனக்கு ஒரு நல்ல செய்தியோட வருகிறேன் என கிளம்பி சென்றான்.  அவனின் பேச்சுக்கள் நித்தியாவிற்கு ஆறுதலாக இருந்தது கண்ணீரை துடைத்து கொண்டே அவன் செல்வதை பார்த்து கொண்டு இருந்தாள்..


வேலை முடிந்து ஆதித்யாவின் வீட்டில்...

அம்மா நான்  திடீரென்று கல்யாணம் பண்ணிகிட்டா என்னமா சொல்வீங்க..???

என்னடா இப்படி குண்ட தூக்கி போடுறே..?? அப்படி ஏதும் கல்யாணம் செய்திட்டியா என்ன..?? 

அப்படியெல்லாம் இல்லமா கேக்குறேன் நீங்க சொல்லுங்க நான் ஒரு பெண்ணை காதலிக்குறேன் நீங்க என்ன செய்வீங்க..??? 

என்ன என்னடா செய்ய சொல்றே, எனக்கு இருக்குறது ஒரே பையன், அதனால உன் ஆசை தான் எனக்கு முக்கியம் அதுவுமில்லாம அது உன் வாழ்க்கை நானா கடைசி வரைக்கும் வர போறேன் உனக்கு பிடிச்சு இருந்தா அவங்க வீட்டுல பேசி உனக்கு கல்யாணம் செய்து வைப்பேன்... ஏண்டா ஏதாவது பெண்ணை காதலிக்குறீயா..??

ஆமா அம்மா, ஆனா நான் இன்னும் அந்த பொண்ணு கிட்ட சொல்லல.. அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப் படுறாமா.. நீ என்னைய வளர்க பூ கடையெல்லாம் போட்டியே அதே மாதரி அந்த பொண்ணும் பூ விக்குறாமா, அவங்க அண்ணன் ஒரு குடிகாரன் என அவளை பற்றியே.. பேசிக்கொண்டு இருந்தான் ஆதித்யா. 

நீ தாம்மா அவங்க வீட்டுல பேசி கல்யாணம் செய்து வைக்கணும்

சரி டா நான் நாளைக்கு அந்த பொண்ண பாக்குறேன்.. எப்படி இருக்கானு அப்பறம் அவங்க வீட்டுல பேசுறேன் 

அம்மானா அம்மா தான் என கொஞ்சி விட்டு சென்றான். 

மறுநாள் அவளிடம் அம்மாவிடம் பேசியதையெல்லாம் சொல்லி தன் காதலை சொல்லி விடலாம் என முடிவெடுத்தான். 

காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பினான், படு வேகமாக அம்மா நான் கிளம்புறேன் என சொல்லி முடிக்கையில் நான் நைட் வரேன் எனக்கு அந்த பொண்ணை காட்டு என அவன் அம்மா சொல்ல சிரித்த முகத்துடன் சரியென கூறிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றான். 


ஏதோ நற்செய்தி சொல்வேன் என்றேவுடன் அவளிற்கு அதை அறிய ஆவலாய் காத்திருந்தாள், பேருந்தில் சென்று கொண்டுயிருக்கும் பொழுதே என்ன பேசவேண்டுமென தீர்மானித்து கொண்டான், பேருந்து நிலையம் வந்தது அவன் இறங்கினான், இருவரின் முகமும் ஒன்று போல் மலர்ந்தது, அவள் முன் சென்று நின்றான், 

என்ன நல்ல விஷயம் சொல்ல போறீங்க..?? சீக்கிரம் சொல்லுங்க என,, அவள் கேட்க இவன் கொஞ்சம் குறும்பு செய்ய நினைத்தான்.

சரி சரி எனக்கு ஒரு ரோஜா பூ கொடு ஒரு ரோஜா எவ்வளவு..??? 

சட்டென் அவன் முகம் பார்த்து யாருக்கு பூ..?? என்றாள்..

நீ முதலில் ரோஜா கொடு..

அவள் ரோஜா வை எடுக்க சென்றாள் 

என் காதலிக்கு கொடுக்குற பூ நல்லா பூ வா கொடு என்றதும்.. அவளது கண்ணீர் ரோஜா மீது பட..

ரோஜாவை அவள் எடுத்து கொடுக்க...!!! 

அவன் மீண்டும் அவளுக்கே கொடுத்தான்... உனக்கு தான் இந்த ரோஜா .. 

அவளின் கண்ணீர் அதிகமானது,,,  அவளின் கண்ணீர் அவன் மீது காதலை உறுதி படுத்தியது..

நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா..?? ..

இதற்கும் அவள் கண்ணீரே பதில் கூறியது.. கண்ணீரை துடைத்து கொண்டே கேள்வியை கேட்டால் இதுவெல்லாம் நடக்குமா..?? 

நீ ஏன் கவலைபடுறே நான் எங்க அம்மாவிடம் சம்மதம் வாங்கி விட்டு தான் வந்திருக்கிறேன். உங்க அண்ணனிடம் சொல்லி பேச சொல்கிறேன் என்றான், அவள் வார்த்தைகள் வராமல் நின்றுகொண்டு இருந்தாள். 

வேலைக்கு சென்று விட்டு உன்னை பார்க்க வருகிறேன் அம்மா உன்னை பார்க்க வேண்டுமென்றார்கள், நீ ரெடியா இரு என்றதும் "என்ன அத்தை வாரங்களா" என முகம் மலர்ந்து அவளுக்கு. சரி ரோஜாவை தலையில் வைத்து கொள்,  சரிங்க நீங்க போயிட்டு வாங்க என்றாள், அவள் வாழ்க்கையில் இன்று தான் மிகவும் சந்தோசமான நாள் அவளுக்கும் வாழ்க்கை, குடும்பம், பாசம் எல்லாம் கிடைக்க போகிறதென்று கனவு கண்டு கொண்டு இருந்தாள். 


ஆதி அம்மாவின் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்தாள்.. வருகையை பார்த்து பார்த்து கழுத்து வலியே வரும் அளவிற்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள். 


அம்மாவும் மகனும் ஒன்றாக வருவதை பார்த்து... எழுந்து நின்றாள். ஆதி இவளை நித்தியா என அறிமுகம் செய்து வைக்க... ஆதித்யாவின் அம்மா .

எவ்வளவு அழகா இருக்கா டா பொண்ணு நல்லா தான் டா இருக்கா, ஆதித்யாவிற்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது .. 

உன் பேர் என்னமா ...??

நித்தியா என அவள் கூற..?? 

அம்மா நான் ஒன்னு உங்களை கேட்கலாம என நித்தியா கேட்க..

என்னம்மா கேளு 

நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா என்றாள்.. எனக்கு நினைவு தெரிந்து நான் யாரையும் அம்மான்னு கூப்பிட்டதே கிடையாது.. உங்களை அப்படி கூப்பிடலாமா.??


இந்த வார்த்தையை கேட்டதும் ஆதித்யாவின் அம்மாவிற்கு சொல்ல முடியாத சந்தோசத்திற்கே சென்று விட்டார், தனக்கு நல்ல மருமகள் கிடைக்க போறா என்ற ஆனந்தம் அவர் முகத்தில் தெரிந்தது...

நீ தாராளமா அப்படியே கூப்பிடுமா எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குமென பேசி கொண்டு இருக்கும் போதே நித்யாவின் அண்ணன் வந்து நின்றான்   



ஏண்டி பூ விக்காம அரட்டை அடிச்சிட்டு இருக்கியா..?? என கடிந்து கொண்டான், 

ஆதித்யாவின்அம்மா யாரென கேட்டு தெரிந்து கொண்டு பேச்சை தொடங்கினார்... 

உங்க தங்கச்சியும் என் பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க நாம பேசி அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் நீங்க என்ன சொல்றீங்க என்ன கேள்வி கேட்க 


நித்தியாவின் கன்னத்தில் பளாரென அறைந்து "ஏண்டி உன்னை பூ விக்க சொன்னா ஒருத்தனை பிடிச்சுட்டு வறீயா"..?? மீண்டும் அடிக்க முயலும் போது ஆதித்யாவின் அம்மா தடுத்து ஏங்க அடிக்குறீங்க .....இப்போ என்ன நடந்து போச்சு... நான் தானே பேசுறேன்.. உங்களுக்கு சம்மதமான்னு சொல்லுங்க... 

என்னால கல்யாணம் பண்ணி தரமுடியாதுங்க... 

ஏன் காரணம் சொல்லுங்க ஏன் முடியாது ...?

"இவள நான் வீட்டு வேலைக்கு அனுப்ப போறேன் அங்க அனுப்பினா எனக்கு மூணு லட்சம் தருவாங்க அதை விட்டுட்டு இவளுக்கு நான் செலவு பண்ணி கல்யாணம் செய்து வைக்கணுமா..?? அதெல்லாம் முடியாது உங்களுக்கு இந்த மாக ராணி தான் வேணும்னா எனக்கு மூணு லட்சம் கொடுத்து கூப்பிட்டு போங்க"

நித்தியா ஒன்றும் செய்யமுடியாமல்  நின்று கொண்டிருந்தாள்...

எவ்வளவு பணம் வைச்சு இருக்க தா டீனு மீண்டும் அடிக்க.. 

ஆதித்யாவின் அம்மாவிற்கு கோவம் வர இனி மேல் அவ மேல கை வைச்ச நடக்குறதே வேற உனக்கு தேவை பணம் தானே பணத்த கொடுத்திட்டு என் மருமகள கூப்பிட்டு போறேன் என சொல்லி நித்தியாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்..

வீட்டிற்கு சென்றதும் ஆதித்யா என்னமா அப்படி சொல்லிடீங்க நம்ம கிட்டஅவ்வளவு பணம் இல்லையே என்ன செய்வோம்... என கேள்வி கேட்டான்,  பின்னா என்னப்பா நம்ம வீட்டு மருமக, அவள நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்து சந்தோசம வைப்போம். என் கிட்ட இருக்க நகையை வைச்சா ஐம்பதாயிரம் கிடைக்கும் ஊர்ல இருக்க இடத்தை அடகுவச்சா 2 லட்சம் மேல கிடைக்கும், நீ ஊருக்கு போய் அந்த வேலைய பார்த்து காசு வாங்கிட்டு வா, நாம நித்யாவை கூப்பிட்டு வருவோம், 

மறுநாள் ஊருக்கு கிளம்பும் முன் நித்தியாவை பார்த்து விட்டு போகலாம் என நினைத்து அவளை பார்க்க சென்றான் அவள் முகம் முழுவதும் காயமாக இருந்தது, என்ன நடந்திருக்குமென்று புரிந்து கொண்டான், நீ கவலை படாதே இன்னும் ரெண்டு நாள் தான்.. உன்னை எங்க வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றான்.. பத்திரமா போயிட்டு வாங்க என்றாள்..

இரண்டு நாளில் அவளை கை பிடிக்க போகிறோம் மென்று ஆனந்தமாய் ஊருக்கு கிளம்பினான், பணம் வசூலித்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான், சந்தோசமாக அம்மாவும் மகனும் பணம் எடுத்து கொண்டு அவளை பார்க்க அவள் வீட்டுக்கு சென்றனர்.. அவளின் வீட்டு முன் ஒரே கூட்டமாக இருந்தது என்னவென்று பதறி போய் ஆதித்யாவின் அம்மா பார்க்க, அவள் சடலமாக கிடந்தாள் ஆதித்தியா ஓடி வந்து கதறி அழுதான். இவையெல்லாம் அவன் அண்ணனின் செயல் தான், என கோவத்துடன் ஆதித்யா அவன் மீது பாய... அனைவரும் தடுக்க, அவளை பார்க்க சென்றான், முகமெல்லாம் காயமாக இருந்தது, அவளின் நிலையை கண்டு கதறி அழுதான்,  உனக்கு தேவை பணம் தானே ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்டு கதறினான்..

அவன் அம்மாவிடம் சென்று.. 

"அம்மா நான் அவளை திருமணம் செய்துகொள்கிறேன் வாக்கு கொடுத்து இருக்கேன்ம்மா.. இப்போ நான் அவளுக்கு தாலி கட்டுறேன்ம்மா நீங்க சம்மதம் தாங்கம்மா" சொல்ல.. "சரிப்பா நான் உனக்கு சம்மதம் தரேன்" ஒரு மஞ்சள் கயிறை வாங்கி வந்து தாலி கட்ட சொல்லி சொன்னார் ஆதித்யாவின் அம்மா.. தாலி கட்டும் போது அவளின் அண்ணன் வழி மறைத்து நான் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நீ தாலியை கட்டிக்கோ என சொல்ல..
பணத்தை அவன் முகத்தில் தூக்கி எறிந்தார் ஆதித்யாவின் அம்மா.. அவன் தாலி கட்ட தலையை தூக்க தலையெல்லாம் ரத்தமாக இருந்தது.. உன் ரத்தத்தை கொடுத்து நீ என்னுடன் சேர வேண்டுமா இதற்கு நீ என்னுடன் சேராமலே இருந்திருக்கலாம்.. உன் ஆசை இப்பொழுது நிறைவேறி விட்டது..... உன்னுடன் சேர்ந்து வாழவேண்டுமென்ற என் ஆசையை யார் நிறைவேற்றுவார்கள்..?? என கதறினான்.



தம்பி கூர்மதியன் பதிவை பார்க்க 


ரேவா வின் பதிவை பார்க்க 



Monday, August 8 26 comments

நினைவுகளில் நீ...









நினைவுகளை மறந்து விடு
என்றாய்..!!!
உன் நினைவுகளை மறக்க
நினைக்கும் பொழுது
நீ கூறிய சொற்கள் 
நினைவுக்கு வருகிறதே..!!!



நீ வரும் பொழுது நான் இல்லை 
நான் வரும் பொழுது நீ இல்லை 
இருவரும் வரும் பொழுது 
நேசம் இல்லை..!!




உன் மெளனம் பல 
வார்த்தைகளை தருகிறது 
கவி எழுத...இருந்தும் 
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!


தேன் போல வார்த்தைகள் 
 வேப்பங்காயாய் இன்று..
சிரித்து மகிழ்ந்த காட்சி 
கானல் நீராய் இன்று.. 
நொடிக்கொருமுறை கேட்ட குரல் 
மௌனமாய் போனது இன்று..
 காயப்பட்ட மனதிற்கு 
உன் நினைவுகள் மருந்தாய் 
போனது இன்று..!!!



மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை

மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!


 
;